திருச்சி, நவ.29: உலக முதலீட்டாளர் மாநாடு வரும் ஜன.7,8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத் தொழில்களில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்று திருச்சியில் தனியார் ஓட்டல் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக 15 நிறுவனங்களுடன் ரூ.499 கோடி முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர்கள், தமிழ்நாட்டில் நிலவும் தொழில்துறைக்கு உகந்த சூழல் அமைப்பு, மேம்பட்ட உள்கட்டமைப்பு, திறமை வாய்ந்த பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வணிக ரீதியான வசதி வாய்ப்புகள் ஆகியவை தொழில் துறையில் முதலீடு செய்வோர்க்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.
அதேபோல் விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோ மொபைல், மின்சார வாகனங்கள், ஜவுளி, தரவு பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட பொருட்கள் உள்பட பல்வேறு துறைகள் அரசிடமிருந்து சிறப்பு கவனம் மற்றும் ஆதரவை பெற்று முதலீட்டு வாய்ப்புகளை பெற்றிட உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடித்தளமாக அமையும் என்றனர்.
நிகழ்ச்சியில் தொழில்துறை அரசு செயலர் அருண்ராய், மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் விஷ்ணு, தொழில் முன்னேற்றக் கழக மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ், தொழில் வளர்ச்சி நிறுவன திட்ட இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருச்சி மண்டல தலைவர் கார்த்திகேயன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் செந்தில்குமார், தொழில் துறையினர், வணிகர்கள், தொழில் முனைவோர், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கட்டுமான பணிகளை விரைந்து முடியுங்கள் அமைச்சர்கள் பேச்சு முதலீடு வாய்ப்புகளை பெற சென்னை மாநாடு அடித்தளமாக அமையும் appeared first on Dinakaran.